இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழ் இளைஞன்!SamugamMedia

இலங்கைத் தமிழர் ஒருவர் படகு மூலம் அரிச்சல்முனைத் தீவை அடைந்து பின்னர் மண்டபம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இலங்கையின் மன்னார் மாவட்டம் முருங்கன் பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த வி.வசந்தகுமார் என்ற 38 வயதுடையவரே இன்று(26) அதிகாலை அரிச்சல்முனைத் தீவை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 1.25 இலட்சம் இலங்கை ரூபாவை செலுத்தி படகில் பயணித்து இந்திய கடற்பரப்பை சென்றடைந்துள்ளார்.

பின்னர் தேவிபட்டினத்தில் இருந்து பஸ்ஸில் ஏறி மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், வசந்தகுமார் 2007 முதல் 2018 வரை சேலம் அகதிகள் முகாமில் குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில்,   அவர் இலங்கைக்கு திரும்பினார்.

இருப்பினும், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் ஒகஸ்ட் 2022 இல் இந்தியக் கரையை அடைந்து, அதன் பின்னர் மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் தனது குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க இங்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் உள்ள தனது நண்பர்களிடம் கடன் வாங்கி, படகுக்கான கட்டணத்தை செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply