பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பதற்கு பதிலாக அரசாங்கம் அரச பல பிரயோகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்றும் நாட்டு மக்களை எதிர்த்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்த முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தேசிய சபை ஸ்தாபிக்கப்பட்டு பொருளாதார ஸ்தீரப்படுத்தல் உப குழு உருவாக்கப்பட்டது.
பொருளாதார மீட்சிக்காக இனங்காணப்பட்ட தொழிற்துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையை தேசிய சபைக்கு சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் முழுமையாக செயற்படுத்த வேண்டும்.
நாடு வங்குரோத்து அடைவதற்கு நாங்கள் என்ன செய்தோம். ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தினாலும், ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என கருதி நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆட்சியாளர்களை விரட்டியடித்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுத்த தூரநோக்கமற்ற தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என்று தெரிவித்துள்ளார்.