ஏனைய மதங்கள் மக்களுக்கான வழிகாட்டல்களை செய்யும்போது இந்துமத ஆலயங்கள் மக்களுக்கு வழிகாட்டாத நிலையிலும் கஸ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவாத நிலையிலேயே காணப்படுவதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் தெரிவித்தார்.
மதமாற்றங்கள் இடம்பெறும்போது நாங்கள் பிறமதங்களை குற்றஞ்சாட்டுவதில் எந்தவித அர்த்தமும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் வெள்ளி விழா நிகழ்வும் தலைமைக்காரியாலய திறப்பு விழாவும் இன்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே கலாநிதி மு.கோபாலரட்னம் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் இந்த கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றியத்தின் வெள்ளிவிழா நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எம்.நவேஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், மட்டக்களப்பு கலாசார உத்தியோகத்தர் கு.குணநாயகம் மற்றும் அம்பாறை கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், மட்டக்களப்பு மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி மைதிலி வார்த்லட், நாவற்குடா கலாசார நிலைய பொறுப்பதிகாரி திருமதி எழில்வாணி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.