குறுகிய காலத்துக்குள் ராஜபக்சாக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை….! சாட்சியங்களோடு உள்ள எம்மை கண்டுகொள்ளவில்லை…! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆதங்கம்…!samugammedia

குறுகிய காலத்துக்குள் ராஜபக்சாக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள எம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வருவதுடன், நீதி கேட்டு போராடி வருகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆண்டுகள் பல கடந்தாலும் நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களிற்கென நிதிகள் ஒதுக்கப்படுவதாக அறிகிறோம். நாங்கள் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம். எமக்கு நிதி தேவை இல்லை. நீதியே எமக்கு தேவை.

இந்த நிலையில், சில ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் எம்மால் சொல்லப்படாத விடயங்களை வெளியிடுகின்றனர். நிதியை எதிர்பார்த்து நிற்பதுபோல் எழுதுகின்றனர். நாங்கள் என்றும் நிதிக்காக போராடவில்லை. எமக்கு நீதியே தேவை.

இலங்கை அரசு நீதி தராது என்பதாலேயே நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். அன்று நாங்கள் வடக்கு கிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே காரணம் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிக குறுகிய 2 ஆண்டுகளிற்குள் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

நாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், கொடூர யுத்தத்தை முன்னெடுத்தார்கள் என்பதற்கும், காணாமல் ஆக்கச் செய்தார்கள் என்பதற்குமான பல சாட்சிகள் ஆதாரங்களுடன் உள்ள போதிலும் எமக்கு நீதி வழங்க எந்த நீதிமன்றமும் முன்வரவில்லை. 

இலங்கை அரசும், சர்வதேசமும் நீதியை வழங்க முன்வரவில்லை. இந்த நிலையிலேயே நாங்கள் எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மாபெரும் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த போராட்டம் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எமது அலுவலகத்திற்கு முன்பாகவும் இடம்பெறும். குறித்த போராட்டத்திற்கு வர்த்தகர்கள், சிவில் அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைத்து எம்முடைய போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *