பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் இந்த நாடு எதிர்காலத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்கின்ற அபாயம் உள்ளதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் எழுத்துச் சுதந்திரம் , பேச்சுச் சுதந்திரம் , ஊடக சுதந்திரம் போன்றவற்றில் பாரிய அடக்குமுறை ஏற்படவுள்ளது இது அரசியலமைப்பில் உள்ள அடிப்படை சுதந்திரங்களை கேள்விக்கு உள்ளாக்குகின்றது.
சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகங்கள் அரசாங்கத்தை அரசின் செயற்பாடுகளை விமர்சித்து எழுத முடியாத அடக்குமுறை. அதனை மீறினால் சட்ட நடவடிக்கை என ஏதேச்சதிகாரப் போக்கில் ஆட்சி புரிவதற்கு வழி திறக்க உள்ளது நிகழ் நிலைக் காப்புச் சட்டம்.
நாட்டில் உள்ள அனைவரையும் குறி வைத்து இச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு இது மிகப் பெரிய அபாயமாகும். காரணம் சிங்கள அரசாங்கத்தின் தமிழின அடக்குமுறை இருப்புக்களின் கபளீகரம் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது மீண்டும் ஒரு தமிழின அழிப்பை சந்திக்கும் ஆபத்துடன் உரிமைப் போராட்டமே கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள் சட்டத்தின் மூலம் அடக்குமுறையை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி ஆட்சியை தொடரவும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் கடந்த கால ஊழல்களில் இருந்து தங்களை காப்பாற்றவும் இப்படியான ஐனநாயக அடக்குமுறைச் சட்டங்களை மக்களுக்குள் திணிக்க முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.





