புத்தளம் மதுரங்குளியில் நஞ்சருந்தி குடும்பஸ்தர் உயிரிழப்பு ..!!

புத்தளம் மதுரங்குளி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நஞ்சருந்தி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி , வேல்சுமனபுர பகுதியைச் சேர்ந்த உதந சனத் பதிராஜா எனும் 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபானம் அருந்தும் பழக்கமுடைய உயிரிழந்த நபர் இதற்கு முன்னரும் ஒருசில தடவைகள் இவ்வாறு தஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் தான் நஞ்சருந்தியிருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் , நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற குறித்த நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து தான் நஞ்சருந்திவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கணவன் கூறியதை கணக்கில் எடுக்காத மனைவி, தமது வீட்டுக்கு முன்னால் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது வீட்டு வாசலில் கணவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்  என மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணையை நடத்தினார்.

அத்துடன், சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடரபில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *