சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வையிலே அமெரிக்காவுடைய நிர்வாகம் இயங்குவதாக கருதுகின்றோம்- கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு..!!

பூகோள அரசியல் காரணமாக இலங்கைத் தீவை மையப்படுத்திய போட்டித்தன்மையிலே சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வையிலே அமெரிக்காவுடைய நிர்வாகம் இயங்குவதாக நாங்கள் கருதுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’ மற்றும் ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் –  அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பொன்றை நேற்று மாலை மேற்கொண்டிருந்தார். 

இந்த சந்திப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய பூகோள அரசியல் காரணமாக இலங்கைத் தீவை மையப்படுத்திய போட்ட த்தன்மையிலே சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வையிலே அமெரிக்காவுடைய நிர்வாகம் இயங்குவதாக நாங்கள் கருதுகின்றோம். 

அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தைய நாடுகளுக்கும், இந்தியா போன்ற நாடுகளுக்கும் சார்பான ஒரு நபராக கருதப்படுகின்றதனாலும், இந்த வருடம் ஒரு தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினாலும் ரணில் விக்கிரமசிங்க இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி  மனித உரிமை மீறல்கள் – சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயகத்துக்கு முக்கியமான தூண்களாக இருக்கக் கூடிய கொள்கைகள் அனைத்ததையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிக மோசமான கொடூரமான சட்டங்களையெல்லாம் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றார்.

 அந்த வகையில் நிகழ்நிலைக் காப்பு சட்டம் – வரவிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அதே போன்று நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் நிரந்தரமாக முடக்குவதற்குரிய உள்ளுர் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

இனி வரப்போகும் உண்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த சட்ட விடயங்களையும் அவரச அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றி – தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை அதிகரித்து – சிங்கள பௌத்த இனவாத சக்திகள் மட்டத்தில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்தெடுத்து – ராஜபக்ஸ தரப்புக்கு கடந்த காலங்களிலே வாக்களித்த மக்களுடைய வாக்கு வங்கியை முழுமையாக கைப்பற்றி ஆட்சிக்கு வருவதற்கு முனைப்பு காட்டி வருகின்றார்.

 பூகோள அரசியல் காரணங்களுக்காக ரணில் விக்கிரமசிங்க மேற்கு சார்ந்த, இந்தியா சார்ந்த ஒரு விசுவாசியாக இருப்பதால் – அமெரிக்க இராஜாங்க திணைக்களம் – மற்றும் அரசு என்பன ரணில் விக்கிரமசிங்க பாரதூரமான மனித உரிமை மீறல்கள் – ஜனநாயக விரோத செயற்பாடுகளை செய்கின்ற போதும், பெருமளவில் அதனை எதிர்க்காமல் கடமைக்கு மட்டும் கருத்துக்களை தெரிவிப்பதுடன் அமைதியாக இருக்கின்ற தன்மை காணப்படுகின்றது.

 ஆகவே, இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு செனட் சபையில் இருக்கக் கூடிய உறுப்பினர்களும் கீழ் சபையில் இருக்கக் கூடிய காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது குரலை எழுப்பி அழுத்தங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறன்றி இந்த நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது கடினமாக இருக்கும். 

அது மட்டுமல்லாமல் – இன்று பொருளாதார ரீதியாக முழுமையாக இலங்கை மேற்கத்தைய நாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கும் போது, அதுவும் விசேடமாக முதலீடுகள் எனப் பார்க்கின்றபோது, மேற்கத்தைய நாடுகளின் ஒத்துழைப்பில்லாமல் அந்த முதலீடுகள் வரப்போவதில்லை என்கின்ற ஒரு நிலையில் உதவி செய்வதற்கான நிபந்தனைகளைப் விதித்து பேரம்பேசக்கூடிய நிலைமை மேற்கு நாடுகளுக்கு இருக்கும் நிலையில் அதனைச் செய்யாமல் செயற்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கின்றது.ஆகவே இப்படிப்பட்ட விடயங்களுக்கு அமெரிக்காவில் இருக்கக் கூடிய நிர்வாகத்துக்கு முற்போக்குவாத சிந்தனையோடு செயற்படுகின்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற வகையில் இதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும் என்பதுடன்  மிக அவசரமாக செய்யவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.

அத்தோடு,  எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய தமிழ்த் தேசத்தினுமைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக வலியுறுத்தி அமெரிக்க அரசு அங்கீகரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் முழுமையான சர்வதேச விசாரணையை நிலை நாட்டுவதற்கு நேரடியாக குற்றவியல் நீதிமன்றம் போன்ற விடயங்களை வலியுறுத்தி பொறுப்புக்கூறல் சம்பந்தமாக மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *