வடக்கு சுகாதாரசேவை ஆளணி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை- சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதி…!

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப மருத்துவப் பிரிவுகளை வார இறுதி நாட்களில் இயக்கவும் வடமாகாண சுகாதார சேவையில் நிலவும் ஆள ணியை நிரப்பவும் சுகாதார அமைச்சின் செயலர் மருத்துவர் மஹிபால அதற்குச் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுகாதார அமைச்சின் செயலர் மஹிபால மற்றும் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன ஆகியோர் வடக்கு மாகாணத்துக்கு நேற்றையதினம் வருகை தந்ததுடன் வடக்கிலுள்ள சில மருத்துவமனைகளுக்கும் விஜயம் செய்ததுடன் வடக்கிலுள்ள மருத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில்  யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவித்த  வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி,

வட மாகாணத்தில் உள்ள ஆரம்ப மருத்துவ சுகாதார அலகுகளை மேம்படுத்தும் முகமாக நான்கு மருத்துவமனைகளைத் திறப்பதற்கான அனுமதியை வழங்கமுடியும் என சுகாதார அமைச்சின் செயலர் தெரிவித்தார்.

மேலும், ஆரம்ப சுகாதார பிரிவுகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நோயாளர் கிளினிக்கை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான ஆளணியைப் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்களுக்கு வழங்குவதன் மூலம் சேவையை வினைத்திறனாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணிக்குரிய அனுமதியை வழங்குவதாகவும் அமைச்சின் செயலர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், சில மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான ஆளணி அதிகமாக தேவைப்படுகின்றது. அவற்றை வழங்குவதாகவும் சுகாதார அமைச்சின் செயலர் உறுதியளித்துள்ளார்.

வட மாகாணத்தில் 140 குடும்பநல சேவை உத்தியோகத்தர்களே உள்ளனர். 

எனவே, எதிர்காலத்தில் குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படும்போது வடக்கு மாகாணத்துக்கு அதிகளவானோரை நியமிக்க இணக்கம் காணப்பட்டது. தாதிய உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு சுகாதார அமைச்சின் செயலர் இணங்கினார் எனவும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *