மிகை வரிச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மிகை வரிச் சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2020/2021 நிதி ஆண்டுக்கான ரூ. 2,000 மில்லியனுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25% வீதமான மிகை வரியை விதிப்பதற்கு 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள மிகை வரிச் சட்ட மூலத்திற்கு சட்ட மா அதிபரின் அனுமதி கிடைத்த நிலையில், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






