தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான வழிமுறை..! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து…!

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழிமுறையாக காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வேலணை துறையூர் முருகன் ஆலய பொது மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கட்சி  முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே  அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.

அதன் ஓர் அங்கமே நாம் இந்த தீவக மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால் பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்த செயற்பாடும் அமையும்.

இதே நேரம் “நீண்ட காலமாக ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக  தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன்.

இதற்கு இந்த தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது.

அதனடிப்படையில், எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட முடிந்தது.

அதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடிகின்றது

அதேபோன்று, எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கும்.

அந்தவகையில் எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், எமது மக்களின் அபிவிருத்திதை மட்டுமல்லாது அரசியல் அபிலாசைகளையும்  எம்மால் பெற்றுத்தர முடியும் என்ற யதார்த்தத்தையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply