பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம்! ஜுன் மாதம் வெளிவரவுள்ள அறிவிப்பு

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் எதிர்கால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதே காலசிறந்தது என வலியுறுத்தியுள்ள பஷில் ராஜபக்ஷ,

மே மாதம் இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. எனவே மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுதேர்தலுக்கு செல்ல முடியும் என்று பஷில் ராஜபக்ஷ அன்றைய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஆனால் பஷில் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக பதிலளிக்காது இறுதி தீர்மானத்தை ஜுன் மாதத்தில் அறிவிப்பதாக கூறினார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிரக்கவும் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply