தீவிரமடையும் 'ரீமல்'' புயல்; – இன்று சக்திமிக்க சூறாவளியாக வலுவடையும்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக உருவாகிய தாழ் அமுக்க நிலையானது மிக வலுவான தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து பின்னர் சூறாவளியாக வலுவடைந்து மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையை நோக்கி நகர்கிறது. 

இந்த  ‘ரீமல்’ புயலானது மேலும் தீவிரமடைந்து மிகவும் சக்திமிக்க சூறாவளியாக மாற்றமடைந்து இன்று நள்ளிரவளவில் வங்காள தேசத்திற்கும் அதனை சூழ உள்ள மேற்கு வங்காள கரையோரப் பிரதேசத்திற்கும் இடையாக ஊடறுத்து செல்லக்கூடும். 

இதன் காரணமாக இலங்கைக்கு நேரடியாக எந்தவித தாக்கங்களும் இல்லாத போதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். 

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். 

சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 

ஆகையால் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை  நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *