வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

வடக்கு தொடருந்து பாதை புனரமைப்புத் திட்டமானது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது நேற்று (27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான மேற்படி தொடருந்து பாதை புனரமைப்பு திட்டத்தை நேற்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

அநுராதபுரம்  ருவன்வெலிசெய வில் நேற்று  (27) நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்விலும் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸதானிகரும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடருந்து பாதை புனரமைப்பு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஐந்து மாத காலங்களுக்கு அநுராதபுரம் – வவுனியா வரையிலான தொடருந்து சேவைகளை முற்றாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து பாதை அபிவிருத்தி திட்டம் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரச நிறுவனமான டெல்கொன் நிறுவனம் இந்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுகிறது.

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்த அபிவிருத்திப் பணிகளால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொண்டால், எதிர்வரும் காலங்களில் சிறந்த தொடருந்து சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டதுடன் வடக்குக்கான தொடரூந்து சுமார் மணிக்கு 100 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் வேகத்தில் பயணிக்கும்.

இதனால் தொடருந்து பயணிகள் எந்தவித தடங்களுமின்றி தமது பயணத்தை தொடர விசேட பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிப்பதற்காக, தொடருந்து திணைக்களம் விசேட பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான நேர அட்டவணையொன்றும் தயாரிக்கப்படும். இக்காலப் பகுதியில் வடக்குக்கான தொடருந்து சேவை அநுராதபுரம் வரை வழமை போன்று நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *