மட்டக்களப்பில் சுட்டுக்கொலை செயப்பட்ட நடேசனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்…!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.

மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர்.

அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் அவரின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதோடு, ஈகைச் சுடர்களையும் ஏற்றினர்.

அதனைத் தொடர்ந்து நினைவுத் தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *