தமிழர் தேசத்தின் தலைமகனாக தமிழ் மக்களை வழிநடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்குத் தமிழினம் இன்று தமிழர் தேசத்தின் தலைநகர் திருகோணமலையில் நடந்த அவரின் இறுதி நிகழ்வில் கண்ணீரோடு விடை கொடுத்தது.
கடந்த ஞாயிறன்று காலமான சம்பந்தனின் இறுதி சமயக்கிரியைகள், இலக்கம் 115, அஞ்சல் நிலைய வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணியளவில் நிறைவு பெற்றன. பிற்பகல் 02 மணிக்கு விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் அஞ்சலி உரைகள் ஆரம்பமாகின.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி லக்ஸ்மன் கிரியெல்ல, பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ப.அண்ணாமலை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ரவூப் ஹக்கீம் எம்.பி., மனோ கணேசன் எம்.பி., த.சித்தார்த்தன் எம்.பி., அருண் தம்பிமுத்து, ஜே.வி.பியின் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உரையாற்றினர்.
இன்றைய இறுதி நிகழ்வுகளில் இலங்கைக்கான அயல் நாட்டுத் தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.