புத்தளத்தில் தொடரும் கடற்படையினரின் வேட்டை- பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு!

கற்பிட்டி இப்பந்தீவு மற்றும் வெல்லமுந்தலம ஆகிய பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரு பிரதேசங்களிலும் கடற்படையினர் விஷேட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கற்பிட்டி – இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 உர மூடைகளை பரிசோதனை செய்தனர்.

குறித்த 15உர மூடைகளிலும் 499 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

வெல்லமுந்தலம களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 7 உர மூடைகளை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.

குறித்த 7 உர மூடைகளிலும் 250 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் கடத்தி வந்த கடத்தல்காரர்கள், கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது இந்த பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை கடலில் தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு இரண்டு பகுதிகளிலும் கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 749 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 22 உரமூடைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 24 உர மூடைகளில் இருந்து 776 கிலோ கிராம் பீடி இலைகள் நேற்று முன்தினம்  கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply