
இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறியுள்ளதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆறு மாதங்களாக பரிந்துரை செய்யப்பட்ட முன்மொழிவுகளை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் யோசனைகளை அமுல்படுத்தினால் அந்நிய செலாவணிப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
எரிபொருள் கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்துவது தொடர்பிலான பிரச்சினை கிடையாது. நீண்ட காலமாக அந்நிய செலாவணிப் பிரச்சினை காணப்படுகின்றது.
பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஆறு மாதங்களாக ஆலோசனை வழங்கி வரும் நிலையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.
இது ஒரு எரிபொருள் கப்பலுக்கு பணம் செலுத்துவது தொடர்பிலான பிரச்சினை போன்று கிடையாது.
நெருக்கடியான நிலைமைகளில் டொலர் தேவையென்றால் டொலரை பெற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். – என்றார்.
அத்தியாவசியமற்ற 700 பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு, எரிபொருள் விலைகளை உயர்த்துதல், சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை மத்திய வங்கி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





