
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரை மாகாணசபைத் தேர்தலில் தேசியவாதியாகக் காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டமே பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கயன் இரமநாதன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட் டத்தை நடத்துவோர் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த போது ஏன் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் வந்துவிட்ட நிலையில் சிலரை தேசியவாதிகளாகக் காட்டுவதற்காகவே இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
நான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திறவன் என்ற நீதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டாம் என கூறவில்லை நீக்கவேண்டும் என்றே கூறுகிறேன்.
ஆகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கையிலெடுத்து மாகாணசபை தேர்தலுக்கான ஒத்திகை பார்ப்பதை தமிழ் தரப்புகள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.





