
நாட்டில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் காலையிலும் மாலையிலும் மாத்திரமே பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கருத்திற் கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும்.
இரவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 25 வீதமான தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.
நாளாந்த சேவைக்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் எதிர்கொண்டுள்ளன.
அத்துடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்தே எங்களால் எரிபொருளை பெறமுடிகின்றது.
இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வந்த போதிலும் இது தொடர்பில் கசப்பான விடயங்களே இடம்பெறுகின்றன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக நீண்டதூர பேருந்துசேவை சாத்தியமற்றதாக மாறியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





