சிலம்பு என்பது தற்காப்பு கலை மட்டுமல்ல, அது தமிழர்களின் அடையாளம் எனவே இந்த தற்காப்பு கலையினை கொட்டகலை பகுதியில் நடத்துவதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர கலைளில் ஒன்றான தேசிய இரண்டாவது சிலம்பாட்ட போட்டியும் பரிசளிப்பு விழாவும் கொட்டகலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாடு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இந்த கஸ்ட்டத்திற்கு மத்தியிலும் நாட்டில் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும் காரணம் சிறிது காலப்பகுதியில் நாடு நல்ல நிலைக்கு மாற்றப்படும்.
இந்த கலையினை வளர்ப்பதற்காக கொட்டகலை சீ.எல.எப் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன் எதிர்காலத்தில் மிகப்பெரிய சிலம்பாட்ட போட்டியொன்று நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த போட்டி நிகழ்வுக்கு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்து சுமார் 200 போட்டியாளர்கள் வரை கலந்து கொண்டனர்.
இதில் தொடுகை சிலம்பு, வீச்சில் சிலம்பு ஆகிய போட்டிகள் இடம்பெற்றதுடன் கண்காட்சி போட்டிகளும் நடைபெற்றன.
இதன் போது மலையகத்தில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு ஆரம்பகர்த்தாவும், சிலம்பாட்ட பெடரேசன் செயலாளர் கே.ஆர் திவாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



