எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது! ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணி எடுக்கவுள்ள நடவடிக்கை

இலங்கையில் இன மற்றும் மதக் குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது என்பதை தேசியக் கொள்கையாக்கி, சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்தது.

இதன்போது இந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரது செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் 06 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில், மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 03 மாகாணங்களில் உள்ள மக்களின் கருத்துக்களும் பெறப்படும் எனக் குறித்த செயலணி தெரிவித்துள்ளது.

மேலும், செயலணியின் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அப்பிரதேசத்தின் பல்வேறு இனக் குழுவினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, எரந்த நவரத்ன, பாணி வேவல, ஐயம்பிள்ளை தயானந்தராஜா, யோகேஸ்வரி பற்குணராஜா, அஸீஸ் நிசார்தீன், கலீல் ரஹ்மான், வைத்தியர் சுஜீவ பண்டித்தரத்ன ஆகியோருடன் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்கவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply