
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிவேண்டி, ஓயாது போராடி வரும் தாய்மார்களை போற்றி அவர்களின் போராட்டத்துக்கு தொடர்ந்தும் தோள்கொடுக்க இன்றைய அனைத்துலக பெண்கள் நாளில் உறுதிபூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பெண்கள், பண்பாடு மற்றும் பாரம்பரியம் அமைச்சு தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில்,
இலங்கை அரச கட்டமைப்பின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்சியாக நீதிக்காக போராடி வரும் தாய்மார்களின் மனவுறுதி என்பது, தமிழர் போராட்டக் களத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பின் தொடர்சியினை வெளிக்காட்டி நிற்பதோடு, தமிழர் தேசத்தின் நீதிக்கான குரலின் குறியீடாகவும் அனைத்துலக அரங்கில் ஒலிக்கின்றது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது அரசியல் போராட்டமாக மட்டுமன்றி, சகத்தின் பல்வேறு எழுச்சிக்கும், மீட்சிக்கும் வித்திட்டிருந்தது. குறிப்பாக பெண்களின் தலைமைத்துவதத்தினையும், அவர்களின் வலிமையையும் போராட்டம் வெளிக்காட்டி நின்றதையும் நினைவுகூர்கின்றோம்.
போரின் ஓய்வுக்கு பின்னரான இக்காலத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில், போரினால் பாதிப்புக்குள்ளான பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள், நெருக்கடிகளின் சொல்லொணாத்துயரங்களை கண்டறிவதற்கும், இதற்கான பரிகாரங்களை இனங்காணவும் ஓர் பொறிமுறையொன்றினை, தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், சிவில் அமைப்புக்களும் உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு இதற்கான சர்வதேச ஒத்துழைப்பினை பெற்றெடுக்க நாம் துணைநிற்போம்.
தேசமாக சிந்தித்து தமிழர் தேசத்தின் வலிமைக்கு பலம்சேர்க்கும் வகையில் துறைசார்ந்து, சாதனை எட்டிவரும் பெண்களைகளையும் இந்நாளில் நெஞ்சார மாண்பேற்றிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நாளினை மையப்படுத்தி இணைய கருத்தரங்கம் ஒன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், பண்பாடு மற்றும் பாரம்பரியம் அமைச்சு ஓழுங்கு செய்துள்ளது.





