
நான் தற்போது வசிக்காத வீட்டின் மின்சார கட்டணம் தொடர்ந்தும் எனது பெயரிலே வந்துகொண்டிருக்கின்றது. அதனையே அதிகளவிலான மின் கட்டணங்களை நான் செலுத்தாது இருப்பதாக ஒருசில நபர்களும் சமூக வலைத்தலங்களிலும் தகவல் பரப்பப்படுகின்றது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மின் கட்டணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.
இதனால் இது தொடர்பான தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. நான் 2015 ஆம் ஆண்டில் குறித்த வீட்டுக்கு சென்ற பின்னர், அந்த வீட்டின் மின் கட்டணங்கள் தொடர்பில் குழப்ப நிலைமை காணப்பட்டது.
அது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு மின்சார சபைக்கு அறிவித்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் மின்சார சபை முறையாக பதிலளித்திருக்கவில்லை. இந்நிலையில் மூன்று தடவைகள் நான் மின்சார சபைக்கு அறிவித்திருந்தேன்.
அத்துடன் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டளவில் குறித்த கடிதங்களை அனுப்பியிருந்தேன். அதன் பின்னர் நான் அந்த வீட்டில் இருந்து வந்த பின்னரும் எனது பெயருக்கே கட்டண பட்டியல் வந்துள்ளது.
அது இப்போது நான் இருக்கும் வீடு அல்ல. நான் அந்த வீட்டில் இருந்த காலத்தில் எனக்கு வந்த மின் கட்டணங்களை செலுத்தி இருக்கின்றேன்.
அதுதொடர்பான பற்றுச்சீட்டுக்கள் இருக்கின்றன. அத்துடன் தற்போது எனது உத்தியோகபூர்வ இல்லத்தின் வீட்டின் மின்கட்டணங்களை நான் செலுத்துகின்றேன்.
ஆனால் நான் இல்லாத வீட்டின் மின்கட்டணமே தொடர்ந்தும் எனது பெயரில் வந்துகொண்டிருக்கின்றது. இந்த விடயம் தெரியாமலே மின் கட்டணம் செலுத்த தவறியமை தொடர்பில் எனக்கு எதிராக பல் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விமர்சனங்களை தெரிவித்தவர்களிலும் தவறு இல்லை. ஏனெனில் எனது பெயருக்கே மின் கட்டண பட்டியல் வருகின்றது என்றார்.





