இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடல்சார் கண்காணிப்பு மற்றும் அனர்த்த மீட்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த உதவியில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைத் தவிர, குறித்த பட்டியலில் தாய்லாந்து, டோங்கா, கிழக்கு திமோர், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ உறுதிப்பாடு காரணமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளை ஆதரிப்பதற்காக, ஜப்பான் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்த உதவி திட்டத்தை ஆரம்பித்தது.
ஜப்பானின் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இந்த உதவி திட்டத்துக்காக, 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.