இலங்கை இராணுவ வீரர்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தாலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்காட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்துக்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும் எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 07 ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்காட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார்.
பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்காட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.
யுத்தம் நிடைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் வலியுத்துகின்றேன் – என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.