ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிநவீனமாகும் திருகோணமலை பொது வைத்தியசாலை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.

இதன் முதலாவது அலகை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிறுவுவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (5) இடம்பெற்றது.

இந்த விழா சுகாதார மற்றும் வெகுசன  ஊடகதுறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைச்சர் உரையாற்றுகையில், 

ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 8 மாடி கட்டடங்களை கொண்ட பிரதான இருதய சத்திர சிகிச்சை பிரிவு திருகோணமலையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும்.

அரசாங்கம் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்த ஐந்து வைத்தியசாலைகளை நவீனமயமாக்கும் திட்டங்களை வடிவமைத்துள்ளது. 

இதில் திருகோணமலை வைத்தியசாலையும் அடங்கும்.

நாட்டிலுள்ள 15 அரச வைத்தியசாலைகளிலும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகள் நிறுவப்படவுள்ளன. 

இன்று திருகோணமலை வைத்தியசாலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டம், கொத்மலை நீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட அநேக நீர் மற்றும் வீதி அபிவிருத்திக்காக, ஜப்பானிய அரசாங்கம் அதிகமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகிறது.

இதற்காக அந்த அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்..

Leave a Reply