கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் பொலிசாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் பிரதானமாக மணல் கடத்தல் நாளாந்தம் பொலிசாரின் அனுமதியுடன் இடம்பெற்று வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது.
இதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டவிரோத மணல் மண் அகழப்பட்ட பிரதேசத்தை பார்வையிட்ட இளங்குமரன் எம் .பி அதிகளவான மணல் மண் அகழப்பட்ட தாளையடி பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்
வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பவர்கள் பொலீசார்.
போதைபொருள் கடத்தல்காரர்களிடமும், மணல் கடத்தல் காரர்களிடமும் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள்.
பொலிசார் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரதமாக குவித்திருக்கிறார்கள். அவர்களுடன் சில பொலிசாரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் பொலிசாருடைய பெயர் விபரங்கள் யாவும் நாங்கள் பெற்றுள்ளோம். இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவிருக்கிறோம்.
இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு பொலிசாரும் உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது.
இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம்.
கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் பொலிசாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என இளங்குமரன் எம்பி கடுமையாக எச்சரித்தார்.




