நுகேகொடையில் நாளை அரசுக்கு எதிராகப் பேரணி – பல கட்சிகள் ஆதரவு வழங்க மறுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி நாளை வெள்ளிக்கிழமை நுகேகொடையில் நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் நுகேகொடை அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், அரசின் ஜனநாயக விரோதச் செயல், அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டணைந்து ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் அரசுக்கு எதிராகப் பேரணியை  நடத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

மலையகத்திலுள்ள பிரதான இரு கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இந்தப் பேரணியில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

விமல் வீரசன்ச, சம்பிக்க ரணவக்க, திலீத் ஜயவீர உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும், அவற்றுக்குச் சார்பான அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மாத்திரமே இதில் பங்கேற்கவுள்ளன.

அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்க மாட்டேன்  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

“பேரணியில் பங்கேற்பீர்களா, இல்லையா எனக் கட்சியின் செயலாளர் என்னைக் கேட்டார். இதன்போது பங்கேற்கப்போவதில்லை எனத்  தெளிவாகக் குறிப்பிட்டேன்.” – என்று நவீன் திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷக்களுடன் இனி ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *