தொடரும் கடும் மழை – வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை! வான் கதவுகளும் திறப்பு

கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகச் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

அதன்படி, கிங் கங்கையில்  நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய-திவிதுர, எல்பிட்டிய மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும்,  

நில்வளா கங்கையில் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும்  மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இதேவேளை, நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் நாட்களில் நாட்டின் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை தொடர் மழை காரணமாக, 9 மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *