
யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் மக்கள் அபிவிருத்தி திட்டங்களில் எம்மை பங்குதாரர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கவில்லை என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களின் அரசாங்கத்தின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
குறித்த நடைமுறையானது தற்போதைய ஆட்சியில் மட்டுமல்ல நல்லாட்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவராக இருக்கிறார்.
அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அவரே இறுதி முடிவு வெடுத்துச் செயற்படுத்துகிறார்.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி இணைத் தலைவராக நான் செயற்பட்டுக் கொண்டு வருகிறேன்.
அதேநேரம் தீவகத்தில் மூன்று பகுதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதன்மைப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறேன்.
இவ்வாறான நிலையில் ஏனைய பிரதேசங்களில் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
அபிவிருத்தி குழு துணைத் தலைவர் என்ற ரீதியில் இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியும்.
ஆனால் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் விளங்கிக் கொள்ளாமல் போராட்டம் நடத்துகிறார்கள்
.
ஆகவே மாவட்ட அபிவிருத்தி குழு துணைத் தலைவர் என்ற ரீதியில் மக்களுடைய தேவைகளை இனங்கண்டு செயற்படுத்துவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.