
திருகோணமலையில் சுகாதார நிபுணர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க கோரி தொழில்சார் சுகாதார வைத்தியர்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (14) பிற்பகல் ஒருமணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்,அரசு எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று, மேலதிக நேர கொடுப்பனவுகளை பெற்று தா, 2006 ஆம் ஆண்டு சம்பள பரிசீலனையா அமுல் செய், வேலை நாட்களை 5 நாட்களாக மாற்றியமை மற்றும் பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்று தா என்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உபசெயலாளர் குணரட்னம் சரவணபவன் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்,
கடந்த வருடம் சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திவந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பயனாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைய கடந்த வருடம் ஜூலை மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மேல் குறிப்பிட்ட கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தாமையினை கண்டிது பல போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு மக்களை சங்கடத்திற்கு ஆளாகாமல் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட ஓர் இரு மணித்தியாலங்கள் மாத்திரம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்
அதன் அடிப்படையில் இன்றைய தினம் மேல் மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண வைத்தியசாலைக்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் சுகாதார அமைச்சு வழங்கிய உத்தரவுகளுக்கு அமைய தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்
இவ்வாறு எடுக்கப்பட்ட கோரிக்கைகள் சுகாதார அமைச்சினால் உத்தரவாதமளிக்கப்பட்ட கோரிக்கைகள் எனவும் குறித்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் எழுத்து மூலமாக வழங்கப்படவில்லை எனவும் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் துணை மருத்துவ சங்கம் மற்றும் தாதிய உத்தியோகத்தர் சங்கம் இணைந்து நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.