புத்தளம் – கற்பிட்டி பங்களாவத்தை மற்றும் சேதவாதீ ஆகிய கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கிவரும் இலங்கை விஜய கடற்படைக் கப்பலின் ஆலங்குடா பிரிவினரால், நேற்று கற்பிட்டியவின் பங்களாவத்தை கடலோரப் பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு உரப் பைகள் இருந்ததை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.
குறித்த உரப் பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 80 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கற்பிட்டி சேதவாதீ கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுடன் இணைந்து நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட 16 சந்தேகத்திற்கிடமான உரப்பைகளை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.
குறித்த உரப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களுக்கும் விற்பனை நோக்கத்திற்காக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட குறித்த மஞ்சள், கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்கும் கடற்படையின் தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக, கடத்தல்காரர்களால் இதனை கரைக்குக் கொண்டுவர முடியாமல், அவற்றைக் கடற்கரையோர பகுதியிலேயே கைவிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.





