சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு நேற்றைய னதினம் (09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் காலை 11.00மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று தற்போது சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கிராம ரீதியான செயற்பாடுகளில் நீண்ட கால அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள்.
இவர்கள் காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலங்களில் சிறப்பாக முன்னெடுத்திருந்தார்கள். கிராம அலுவலர் பிரிவின் செயற்பாடுகளில் கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் கூட மக்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதில் இந்த மூன்று உத்தியோகத்தர்களும் இணைந்த வகையில் செயற்பட்டிருந்தார்கள்.
தற்போதைய அரசாங்கத்தினுடைய பிரதான கொள்கைகளாக கிளீன் ஸ்ரீலங்கா, டிஜிட்டல் மயமாக்கல், சமூக சக்தி ஆகிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் காணப்படுகிறோம். இந்தத் திட்டங்களை சமூக சக்தி செயற்பாட்டை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துவதில் இந்த சமூக வலுவூட்டல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றார்கள்.
குழுவின் செயலாளர்களாக இருந்து அந்தக் குழுவை கொண்டு நடாத்துகின்ற பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாக இருக்கிறது. கிராமத்தின் உடைய வறுமை நீங்கும் போது பிரதேசத்தினுடைய வறுமை நீங்கும். பிரதேசத்தினுடைய வறுமை நீங்கும் போது மாவட்டத்தினுடைய வறுமை நீங்கும். மாவட்டத்தினுடைய வறுமை நீங்கும் போது நாட்டினுடைய வறுமை நீங்கும்.
அந்த வகையில் கிராம மட்டத்திலேயே இந்த வறுமை நிலைகளை நீக்கும் தேவைப்பாடு இருக்கின்றது. ஆகவே சமூக சக்தி செயற்பாட்டை கிராமங்களில் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டினை மேற்கொள்கின்றபோது உங்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் காணப்படுமாக இருந்தால் அந்த விடயங்களை தெரிவிப்பதன் மூலம் தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதோடு கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினுடைய வழிகாட்டல் ஆலோசனைகளுக்கு அமைய நாங்கள் இந்த செயற்பாடுகளை மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடும் கடப்பாடும் எங்களுக்கு இருக்கிறது.
ஆகவே இந்த பல்பரிமாண வறுமை ஒழிப்பு வேலைத் திட்டத்தை பிரதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்ற போது அமைச்சினுடைய சுற்று நிரூபனத்திற்கு அமைய சரியான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் வறுமையினை நீக்க முடியும். அந்த வகையில் எமது மாவட்டத்திற்கு 651.96 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. 357.12 மில்லியன் ரூபாய் கிராம அலுவலர் பிரிவு எண்ணிக்கை அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படவுள்ளது.
மிகுதியாக உள்ள நிதி தங்களது பல் பரிமாண வறுமை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக உங்களிடமிருந்து கிடைக்கப்பெறும் திட்டத்தின் அடிப்படையில் பங்கீடு செய்து வழங்கப்படவிருக்கிறது. உங்களது கிராமம் சார்ந்த விடயங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.
வறுமைக்குரிய காரணங்களை அடையாளப்படுத்தி பிரதேச செயலாளர்கள் ஊடாக பொருத்தமான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த கோரிக்கைகளை அமைச்சுக்கு முன் வைக்கமுடியும். ஆகவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு நீங்கள் மிகச் சரியான முறையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்துகின்ற புதிய திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு
குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது கலந்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்குரிய தெளிவூட்டல்களை இக்கூட்டத்தில் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் , மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமாரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் திரு.எஸ்.கபிலன், நல்லூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விடய உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





