பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு

நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை, நாடு கடத்த நியூசிலாந்து அரசாங்கம் பல வருடங்களாக முயன்றது என நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 2011 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்து, அகதி அந்தஸ்து கோரினார். ஆனால் அவரது கோரிக்கை ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டது. பின்னர்  அகதி அந்தஸ்து டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தனிநபரின் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து  2016 ஆம் ஆண்டில் அவர் பொலிஸாரின் கண்காணிப்புக்குள் வந்ததுடன் அவரது அகதி அந்தஸ்து  2019 இல் இரத்து செய்யப்பட்டுடன் நாடு கடத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன என நியூஸிலாந்து பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் அகதி அந்தஸ்து வழக்கு தீர்க்கப்படும் வரை அதிகாரிகள் அவரை சிறையில் தடுத்து வைக்க முயன்றனர். ஆனால் அவ்வாறு செய்வதற்கு சட்டத் திட்டங்கள் இல்லாதமையினால் அது பயனிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.எஸ்.அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் நியூஸிலாந்தில் பதிவான பயங்கரமான தீவிரவாத தாக்குதலாக இது பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *