திருகோணமலையில் இடம்பெற்ற கொவிட் செயலணிக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (06) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை எவ்வித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற்றதாகவும் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சுகாதாரத்துறை, முப்படை, பொலிசார் மற்றும் தொடர்புற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மேலும் அத்தியவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்திற்கு முரணாக செயற்படும் வர்த்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கொவிட் தொற்று அறிகுறியுடையவர்கள் தகவல்களை மறைக்காது செயற்படல் வேண்டும். தகவலை மறைத்து செயற்பட்டு நோய்த்தாக்கம் கூடியபோது வைத்தியசாலையை நாடுவதால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகும்.

திருகோணமலையில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுள் அதிகமானவை அவ்வாறான தன்மையால் ஏற்பட்டது. எனவே மக்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படல் வேண்டும் என்று இதன்போது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜி.எம்.கொஸ்தா தெரிவித்தார்.

அத்துடன், இக்கலந்துரையாடலில் கொவிட் மரணங்கள் தொடர்பான உடலங்களை தாமதியாது தகனம்/ அடக்கம் செய்தல் உட்பட பல விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,முப்படை, பொலிஸ் அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *