யாழில் 5641 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; வெளியானது முழு விபரம்..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்தார்.

தற்போது உள்ள கொரோனா தொற்று தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற போக்கு சற்று குறைவடைந்து காணப்படுகின்றது .

யாழில் நேற்று 213 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ளது அதேநேரம் 5 ஆயிரத்து 641 குடும்பங்கள் யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதலாவது டோஸ் தடுப்பூசி 2 லட்சத்து 965 ஆயிரத்து 315 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஆனது நேற்றுவரை 2 இலட்சத்து 15 ஆயிரத்து 552 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 30 வயதிற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய விவரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பியிருக்கிறோம். அதற்குரிய அறிவுறுத்தல் கிடைத்த பின் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.

எனினும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமையானது அபாய நிலையிலேயே காணப்படுகின்றது.
பொதுமக்கள் பொது முடக்கத்தினை துஸ்பிரயோகம் பண்ணாது தங்களையும் பாதுகாத்து, சமூகத்தையும் பாதுகாத்து செயற்பட சகலவிதமான விழிப்புணர்வு செயற்பாடுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .

ஒவ்வொரு கிராமங்கள் தோறும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரையில் சீனி மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு கடந்த காலத்தில் தட்டுப்பாடு காணப்பட்டது.
எரிவாயு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. மேலும் சீனியினுடைய விலையும் தற்போது குறைவடைந்துள்ளது. அதேநேரம் உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் இணைந்த வகையில் இந்த சீனி பகிர்ந்தளிப்புக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என கண்காணிப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பாவனையாளர் பாதுகாப்புஅதிகார சபையின் ஊடாக அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பொருட்கள் விநியோகத்தினை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வியாபாரிகள் பொருட்களை பாதுகாத்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *