யாழ்.செம்மணி பகுதியில் இருந்த இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் உட்பட அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய கட்சியினரால் நினைவு கூறப்பட்டது.
1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி 18 வயது மாணவியான கிருசாந்தி, வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தி கழுத்தை நெரித்துப் படுகொலை செய்திருந்தனர்.
அத்துடன், மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் தாயார் இராசம்மா,அயலவர் கிருபாமூர்த்தி, தம்பி பிரணவன் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர்.
இதேவேளை, யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.