ஆற்றுப்படுகையில் மீண்டும் தீ பரவல்!

சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக எரிந்து சாம்பலாவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆற்றுப்படுகையில் மீண்டும் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போன்று தீ விபத்து  ஏற்பட்டதில் நாணல் மூங்கில் சருகு எரிந்து நாசமாகி வருகின்றது.

இதனால் குறித்த பகுதியை சூழவுள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரியநீலாவணை பகுதிகளில் எரிந்த நாணல் கீற்றின் சாம்பல் துகள்கள் விழுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், ஏராளமான மூங்கில் தட்டு நாணல் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளது.

மேலும் அருகே எவ்வித குடியிருப்புகளும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அதிகமான பறவைக் குஞ்சுகள் இறந்துள்ளதுடன், பாரிய பறவைகள் இதனால் இடம்பெயர்ந்துள்ளன.

கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் வீசுகின்ற கடும் காற்றினால் குறித்த நாணல் காடுகள் உராய்விற்குட்பட்டு எரிந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், சில இனந்தெரியாதவர்களினால் பறவை மிருக வேட்டைக்காவும் குறித்த நாணல் காடுகள் எரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதியில் உள்ள கிட்டங்கி ஆற்றின் மருங்கிலும் இவ்வாறான மூங்கில் சருகு நாணல்கள் காய்ந்து காணப்படுவதுடன், நேற்று மாலை இப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *