நாடாளுமன்றில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது – முக்கிய வாக்கெடுப்பு இன்று!

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார்.

அதற்கு ஜனாதிபதியினால் பதிலளிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பதில் தற்போது சிக்கல் இல்லை எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார்.

இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.

இதேநேரம், ஆளுங்கட்சி சார்பாகவும் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நெருக்கடியின்போது நடைபெறும் முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.

எனவே, நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை அறியும் வாய்ப்பையும் இது உருவாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *