முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படுவதில்லை! – வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படுவதில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பவுசர் உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவடைந்த போதிலும், தொடர்ந்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பல மைல் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நிற்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியாக எரிபொருளை ஏற்றி வந்த மற்றுமொரு கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

40,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு குறித்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்தியா இதுவரை கிட்டத்தட்ட 440,000 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *