கஞ்சாவுடன் சென்றவரை மடக்கி பிடித்த பொன்னாலை இளைஞர்கள்!

பொன்னாலை ஊடாக காரைநகருக்கு கஞ்சா கொண்டு சென்றவரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது குறித்த நபர் கஞ்சாவையும் கைத்தொலைபேசியையும் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம்  நேற்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நபரொருவர் கஞ்சா கொண்டு செல்கின்றார் என பொன்னாலையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை வழிமறித்த இளைஞர்கள் விசாரணை நடத்தினார்கள். இதன்போது அவரிடம் கஞ்சா இருந்தமை கண்டறியப்பட்டது.

அவரை வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்ற போது திடீரென்று அவர் காரைநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

இது தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் கஞ்சாவும் கைத்தொலைபேசியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசியை வைத்து குறித்த நபரைக் கைது செய்வதற்காக நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பொன்னாலை கரையோர வீதியூடாக கஞ்சா பரிமாற்றம் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளமையால் சந்தேக நபர்களை மடக்கிப் பிடிப்பதற்கு பிரதேச இளைஞர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *