முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நெல்களஞ்சியசாலைக்கான அடித்தளத்திற்கான மண் நிரப்பும் நடவடிக்கைக்காக அருகில் உள்ள வழிபாட்டு இடம் ஒன்றின் பகுதிகளை கனரக இயந்திரம் கொண்டு தோண்டியபோது தொல்பொருள் சிதைவுகள் காணப்பட்டுள்ளது.
இவற்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் வசந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் கனரக இயந்திரத்தின் சாரதி ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் வசந்தபுரம் கமக்கார அமைப்பிற்கான நெல் காயவிடும் தளம் பிரதேச செயலத்திற்கு சொந்தமான இடம் ஒன்றில் அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மன்னாகண்டல் கிராம சேவையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர் படையினர் ஆகியோர் பிரசன்னமாகி சம்பவம் மற்றும் இடம் தொடர்பில் கிராமசேவையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான இடம் என்றும் விவசாயிகளின் நெல் காயவிடும் தளத்திற்காக இது அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பகுதியில் மண் தோண்டுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் கிராம சேவையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் கனரக இயந்திரத்தின் சாரதிஆகியோரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த பகுதி தொடர்பில் கிராமத்தினை அறிந்த வயதானவர் ஒருவர் தெரிவிக்கையில், “குறித்த நெல் தளம் அமைந்த பகுதிக்கு அருகில் ஒரு கூழா மரத்தினை கொண்ட சிறு குன்று போன்ற பகுதி காணப்படுகின்றது.
இதில் காளி கோவில் என கிராமத்தினை சேர்ந்த ஒருவர் வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார். மரத்தின் கீழ் கற்களை வைத்து நீண்டகாலமாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னாகண்டல் என்ற கிராமம் பெயர் வர காரணம் மன்னர் ஆண்ட பகுதியாக காணப்படுவதால் அருகில் கெருடமடு கிராமம் காணப்படுகின்றது.
இந்த பகுதியில் மன்னர்கள் ஆண்டதற்கான தடையங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன ஆனால் தற்போது தொல்பொருள் இனம் காணப்பட்ட இடம் நீண்டகாலமாக காளி கோவில் என்று மரத்தின் கீழ் கல்வைத்து கற்பூரம் கொழுத்தி வழிபாடுசெய்து வந்துள்ளார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியினை தொல்பொருள் திணைக்களம் மற்றும் படையினர் ஆகியோர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
