
முகநூலில் நிர்வாண ஒளிப்படங்கள், காணொலியை பதிவேற்றப் போவதாக இளைஞனை அச்சுறுத்தி கப்பம் கோரல்; கோப்பாய் பொலிசாரால் தம்பதி கைது.
இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவு.
கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த இளம் கணவன், மனைவி கைதுசெய்யப்பட்ட நிலையில் சந்தேகநபரது சகோதரர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.
சந்தேக நபர்கள் முகநூல் போலிக் கணக்கில் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பாகியுள்ளனர். பின்னர் இளைஞனை கோப்பாய்க்கு அழைத்து தமது வீட்டில் அறையில் பூட்டிவைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததுடன், ஒளிப்படம் மற்றும் காணொளிப் பதிவை மேற்கொண்டுள்ளனர்.
ஒளிப்படம் மற்றும் காணொளியை முகநூலில் பதிவேற்றப்ப போவதாக அச்சுறுத்தி இளைஞனிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை கோரியுள்ளனர். அச்சமடைந்த இளைஞன் வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை கடந்த வாரம் வைப்பிலிட்டுள்ளார்.
இந்த நிலையில் மீளவும் இந்த வாரம் அந்த ஒளிப்படங்கள் மற்றும் காணொலியை பதிவேற்றப் போவதாக மிரட்டி இளைஞனிடம் 5 லட்சம் ரூபாய் கோரியுள்ளனர்.
அதனால் அச்சமடைந்த இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்திருந்தார். அதனை விசாரித்த பொலிஸார் இளம் தம்பதியை நேற்று கைது செய்தனர்.
இளம் குடும்பத்தலைவர் இராணுவத்தின் வேலைப் பகுதியில் இணைந்து பணியாற்றி விலகியவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். தலைமறைவாகிய இருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.