தியாகத்திற்கு நாம் தயார் – ஜனாதிபதியின் பதிலின் பின்னரே இடைக்கால அரசாங்கம் தொடர்பான தீர்மானம்! – நிபந்தனை விதித்துள்ள சஜித்

நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈடுபடுகிறது. அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வதற்கு இரு முறை சிந்திக்க மாட்டோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தை இன்று சந்தித்த அவர், தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு சர்வாதிகாரம் மிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே முக்கியமான காரணமென தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட 21 ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி ஜனநாயகத்தை பலப்படுத்துவது மிக முக்கியமான விடயம்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவிற்கும், ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது சீர்திருத்தத்திற்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. அம் முன்மொழிவுகளை அடிப்படையாகக்கொண்டு முற்போக்கான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படுகிறோம்.

இப்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் சர்வாதிகாரம் மிக்க நிறைவேற்று ஜனாதிபதி முறைமையாகும். அதை உடனடியாக நீக்க வேண்டும்.

இத்தருணத்தில் முக்கியத்துவம் இடத்தைப் பெற்றுக் கொள்வதோ, பொறுப்புகளை பெற்றுக்கொள்வதோ முக்கியமல்ல. முக்கியத்துவம் பெறுவது சமூக மற்றும் தேசிய கடமைகளை நிறைவேற்றுவது ஆகும். அதற்காக முன்னெடுக்க வேண்டிய அனைத்து விதமான தியாகங்களுக்கும் நாம் தயாராக உள்ளோம்.

நாடு முன்னேற வேண்டுமாயின் 21 ஆவது சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று உடனடியாக நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லா சவால்களை ஏற்றுக்கொள்கிறேன்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *