
தற்போது எல்லா மக்களும் சேர்ந்து செயற்படும் காலம் வந்துள்ளது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. க. செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நிலைமைகள் மாறியுள்ளன.
ஏற்கனவே இப்படி அரசாங்கத்திற்கு எதிராக பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.
அதனை ஒப்பிட்டு நோக்கும் போது இது பாரியளவில் சம்பவங்கள் ஏற்படுமென்பது தெரியவருகிறது.
நாம் இவ்வாறு நடைபெறும் என முன்னரே எதிர்பார்த்தோம். இதுபற்றி மக்களுக்கும் அறிவூட்டி வந்துள்ளோம்.
இப்போது எல்லா மக்களும் சேர்ந்து செயற்படும் காலம் வந்ததாக நாம் நினைக்கின்றோம்.
எல்லா இன, மொழி மக்களும் இணைந்து ஜனநாயக ஆட்சி, ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க முன்செல்ல வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்று எழுத்தப்பட வேண்டும் .
அந்த புதிய அரசியலமைப்பு மக்களை பிரதிபலிக்கவேண்டும். இது பாராளுமன்றத்தில் உள்ளவர்களின் பொறுப்பு அல்ல. அவர்கள் பொறுப்பில்லாதவர்கள்.
அதிலுள்ளவர்கள் பொறுப்புள்ளவராக, ஊழல் அற்றவர்கள் ஆக இருந்திருந்தால் இன்று இந்த நாடு இப்படி ஓர் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.
பொருட்களின் விலை உயர்வும் , தட்டுப்பாடும் மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்துள்ளது.
இறக்குமதி பொருளாதாரத்திலே, நுகர்வு பண்பாட்டில் தங்கி இருந்தோம். தற்போது அதற்குரிய எதிர்விளைவுகளை அனுபவிக்கின்றோம்.
மக்கள் மிகக் கட்டுப்பாடாக இருப்பதோடு மிக விழிப்பாக இருக்க வேண்டும் . ஆளும் கட்சியில் இருப்பவர்கள் மேலும் இன, மத குரோதத்தை தூண்டி பிளவுகள் ஏற்படுத்தி கடந்த காலம் போல் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.
இது மக்கள் போராட்டம். அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்திகள், மக்களின் கோரிக்கைகளையும் உள் வாங்கி செயற்பட வேண்டும் என்றார்.