‘உங்களை நாம் பாதுகாப்போம் ‘ என போராட்டக்களத்தில் உள்ள விசேட அதிரடிப்படையினர் மக்களிடம் தெரிவித்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் தூண்டுதலில், மகிந்த ஆதரவாளர்கள் மக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹோட்டல் விடுதியொன்று தாக்கப்பட்டது.
அதன் பின்னர் அங்கிருந்த சொத்துக்கள் அனைத்துத் தரப்பினராலும் சூறையாடப்பட்டிருந்தது.
இதனை மையப்படுத்திக் கொண்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, இனவாதத்தைத் தூண்டும் வகையில் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் முயற்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அத்துடன், கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பி, கிறிஸ்தவ மக்களை தூண்டிவிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவும் முயற்சிக்கப்பட்டிருந்தது.
எனினும், பாதிரியார்கள் உடனடியாக களத்திற்கு வந்து கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்தியிருந்தனர்.
வன்முறையின் பின்னர் விசேட அதிரடிப்படையினர் களமிக்கப்பட்டபோதிலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது.
எனினும், விசேட அதிரடிப்படையின் வீரர்கள், பொதுமக்களுக்கு உறுதி வழங்கி, வன்முறையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
குறித்த விசேட அதிரடிப்படை வீரர் பொதுமக்களிடம் பேசிய வீடியோ தற்போது அனைவராலும் பகிரப்படுகிறது.
உங்களை நாம் பாதுகாப்போம் என்பதை நிறைவேற்றியுள்ளனர். வன்முறை தடுக்கப்பட்டுள்ளதுடன், இனவாத அரசியலுக்கும் தோல்வி ஏற்பட்டுள்ளது.