
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மோதலின்போது, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் அக்கறையுள்ள அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைக்கவில்லை எனவும், நாட்டில் புலனாய்வு பிரிவு செயற்படுவதில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தொடர் வன்முறைச் சம்பவங்களில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டத் தவறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆற்றிய பங்கு குறித்து பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் விளக்கமளித்தனர்.
அதன்படி அவதானிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.