
பாடசாலைக்கு வருவது அவரவர் கைகளிலேயே _வடக்கு கல்வி அமைச்சு
நாளை பாடசாலைகள் நடைபெறுமா என்பது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெளிவான அறிவுறுத்தல் எதையும் வழங்கவில்லை.
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேநேரம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளன.
பாடசாலைகள் 7.30 மணிக்கு ஆரம்பமாகும் நிலையில், பெற்றோர்களும், மாணவர்களும் நாளை பாடசாலைகள் நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரனிடம் கேட்டபோது பாடசாலை நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பாக உறுதியான தகவலைத் தெரிவிக்கவில்லை.
நாம் யாரையும் பாடசாலைக்கு வர வேண்டாம் என்று கூற முடியாது. பாடசாலைகளை மூடவும் முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தாங்களாக முடிவெடுக்க வேண்டும்.
நாளை பாடசாலைகளுக்கு வருவது அவர்களின் கைகளிலேயே உள்ளது. ஆனால் வடக்கு மாகாணத்தில் நாளை பாடசாலைகள் மூடப்படாது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.