ஊரடங்கு உத்தரவு இன்று தளர்வு – 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

முன்னதாக நேற்று காலை வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

அதன்படி, அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள “மைனா கோ கம” போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள ‘கோடா கோ கம’ போராட்டகளம் இரண்டையும் அவர்கள் தகர்த்தெறிந்திருந்தனர்.

இதனையடுத்து, கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்டபட பொதுமக்களும் இணைந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள்கொண்டு வருவதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *