
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜினாமா செய்த நிலையில் தற்போது அந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று அவரது தலைமையிலான அமைச்சரவையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்களை ஏற்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை விக்ரமசிங்கே உருவாக்குவார் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடுமையான நிபந்தனைகளின் கீழ் புதிய அமைச்சரவையை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி விருப்பம் தெரிவித்திருந்தது.
நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர் இணங்க வேண்டும்.
நாட்டின் நிலைமை ஸ்திரமானவுடன் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நிபந்தனைகள். புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரையில் புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தி மறுத்திருந்தது எனவும் தெரிவித்தார்.